;
Athirady Tamil News

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 19 பேர் பலி

0

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது.

அமெரிக்கா தாக்குதல்
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. ஹர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதிக்க முயன்றதாகவும், அதை தடுக்கும் வகையில் ஹர்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் லாரக் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மீது தாக்குதல் நடத்தபப்ட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

ஈரான் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் மீதும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் இரு நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பாலும் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அதேவேளை, இந்த மோதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா நேற்று இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. ஈரானின் குஜெஸ்தான் , ஹர்முஸ்கன், மாகாணங்களில் உள்ள பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சிரிக், குகிஷ்டக், ஜஸ்க், சாம்பஹார், கோனரக், அஹ்வாஸ், அஹஜரி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஈரானின் ஏவுகணை தளம், ஆயுதக்கிடங்குகள், ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

19 பேர் பலி
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமண நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளை, பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.