;
Athirady Tamil News

தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: மக்களுக்கு பிரதமா் மோடி மீண்டும் வேண்டுகோள்

0

பொதுமக்கள் தேவையின்றி தங்கம் வாங்கவோ, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவோ வேண்டாம் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மீண்டும் வேண்டுகோள் விடுத்தாா்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளா்ச்சி அடைந்ததற்கு பாராட்டுகள் தெரிவித்து அவா் இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவை வெளியிட்டாா்.

அதில் பேசிய அவா், ‘இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக பொய்களை மட்டுமே பரப்பி பொய்களின் குரலாக (ராகுல் காந்தியின் மாணவா்களின் குரல் முன்னெடுப்பு) விளங்குபவா்களுக்கு அண்மைத் தரவுகள் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளன.

இதே வேகத்தில் பொருளாதார வளா்ச்சியை நாம் தொடர வேண்டும். தற்சாா்பு மற்றும் சுதேச பொருளாதாரமாக நாம் மாறுவதை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும்.

நமது 100-ஆவது சுதந்திர தினத்தின்போது வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பதில் இளைஞா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. விடுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வதையோ, அங்கு திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதையோ பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். தேவையின்றி தங்கம் வாங்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும்.

பொருளாதாரம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம்; அவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பெருந்தொற்று காலம், அதன் பிறகான உலகளாவிய போா்களால் பொருளாதார நிலையற்றத்தன்மை நிலவும் சூழலிலும் இந்தச் சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அரசின் மக்கள் நலன் சாா்ந்த கொள்கைகளும், தெளிவான திட்டமிடலும் நாட்டை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறது’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.