;
Athirady Tamil News

எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து.. எவ்வளவு இந்தியர்களுக்கு பாதிப்பு..?

0

வாஷிங்டன்,

எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால், 1 லட்சம் இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பணி அனுமதி ரத்து

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி சட்டப்பூர்வமாக வேலை செய்ய உதவும் எச்-4 விசா பணி அனுமதியை ரத்து செய்யும் முன்மொழிவு, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை ஒழுங்குமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

94 சதவீதம் பேர்

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கிரீன் கார்டு பெற காத்திருக்கும் எச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு வேலை அனுமதி அளித்த 2015-ம் ஆண்டின் ஒபாமா ஆட்சிக்காலக் கொள்கையை ரத்து செய்கிறது.

இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட எச்-4 பணி அனுமதிகளில் 93 சதவீதம் இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. இதில் 94 சதவீதம் பேர் உயர் கல்வி கற்ற இந்தியப் பெண்கள் ஆவர். தற்போது 1 லட்சம் இந்தியக் குடும்பங்கள் இந்த அனுமதியை நம்பியுள்ளன.

அமெரிக்காவில் தங்குவதில் சிரமம்

அமெரிக்காவில் இபி-2, இபி-3 நிரந்தரக் குடியுரிமைப் பிரிவுகளுக்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எச்-4 பணி அனுமதி இல்லையென்றால் வாழ்க்கைத் துணைகள் அமெரிக்காவில் தங்குவதில் சிரமம் ஏற்படும்.

அதேவேளையில், தற்போதைய பணி அனுமதிகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்டகால நடவடிக்கையாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், முறையான விதியை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, பல கட்ட சட்ட ஆய்வுகளைக் கடக்கப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.

ஏற்கெனவே, புதிய எச்-1பி விசாக்களுக்கு கூடுதலாக சுமார் ரூ. 98 லட்சம் கட்டணம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ள நிலையில், தற்போது எச்-4 விசா வைத்திருப்பவர்கள் பக்கமும் திரும்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.