;
Athirady Tamil News

சிக்கிமில் 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தம்

0

கேங்டாக்: நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 16 ஆபத்தான பனிப்பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிக்கிம் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் கூறியதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரழிவைத் தொடர்ந்து ஏரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நீர்மட்ட மாற்றங்களைக் கண்டறிய தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சிக்கிம் மாநிலத்தைப் பொருத்தவரை சிறியதும் பெரிதுமாக 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் நடத்தப்பட்ட தீவிர ஆய்வின் அடிப்படையில், 16 பனிப்பாறை ஏரிகள் மிகவும் ஆபத்தான நிலப்பகுதியில் உள்ளவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 13 ஏரிகள் வட சிக்கிமிலும், 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் அமைந்துள்ளன. இந்த ஏரிகளின் நீரின் அளவைக் கண்காணிக்கத் தொடர் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

பெரும்பாலான இடங்கள் வட சிக்கிமில் உள்ளதால், அங்கு நீர்மட்டம் உயர்வதை உடனடியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் தானியங்கி எச்சரிக்கைக் கருவிகளை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செவாங் கூறினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.