;
Athirady Tamil News

உயிர் பிழைத்தது எப்படி? 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய தகவல்!

0

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

நிச்சயம் மீட்புப் படை வீரர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கடந்த 9 நாள்களும் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்றே உச்சரித்துக் கொண்டேயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ஷா பற்றி தகவல் தெரியாமல் இத்தனை நாள்களும் தவித்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயம் இது கடவுள் கிருஷ்ணர் கொடுத்த வரமாகவே அமைந்திருக்கலாம்.

அதற்கேற்ப, அவர் கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி நாளில் மீட்கப்பட்டிருக்கிறாரே, 9 நாள்களுக்குப் பின் இருவர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதே மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியால் என்று பலரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில், தற்போது சஞ்சய் கூறியிருக்கும் தகவல் பலரையும் உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதம் ஏற்பட்டது. நேபாள நாட்டின் உள்கட்டமைப்பிலும் பேரழிவு ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி, நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. 3000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவரை இன்று காலை நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மீட்கப்பட்டவர்கள், சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் எனும் திரிசூலி நீா்மின் திட்ட அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் அழைத்துச் சென்று சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் மேலும் 150 பேரை மீட்கும் பணியை நேபாள ராணுவத்தினர் விரைவுப்படுத்தியுள்ளனர். எனினும், சுரங்கம் மிகப்பெரியது என்பதால் அனைவரும் பத்திரமாக இருக்கும் வாய்ப்பு குறைவு, ஒரு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள், ஒரு பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.