;
Athirady Tamil News

2 ஆவது சர்வதேச விசாரணை நிச்சயம் வரும் !!

0

குழுக்களை அமைப்பது முழு நாட்டையும் பாதிக்கும் என்று தெரிவித்த என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

சனல் 4 விவகாரம் தொடர்பில் தெரிவுக்குழுவை அமைப்பது குறித்து பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்காவிட்டால் இது சர்வதேசத்திற்கு செல்லும். அப்படியென்றால் இரண்டு சர்வதேச விசாரணைகள் நடக்கும். ஏற்கனவே இறுதிக்கட்ட யுத்த காலம் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. அது முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் அது முடியவில்லை. கடந்த வருடமும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அலுவலமும் அமைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் நீக்கப்பட்ட மேஜர் ஜெனரல்கள் எங்களுக்கு எதிராக சாட்சியமளிக்கின்றனர். அதனுடன் இப்போதுள்ள விடயமும் போகும். இதன்படி இரண்டு சர்வதேச விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். இப்படி இருந்தால் முதலீட்டாளர்கள் இங்கே வருவார்களா? இதனால் குழுக்களை அமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இது முழு நாட்டையும் பாதிப்புக்குள்ளேயே கொண்டு செல்லும்

தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தொடர்பாக மலல்கொட ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இருந்தது. அதுவும் செயற்படவில்லை. இந்த அரசாங்கமும் பொதுஜன பெரமுன அரசாங்கமும் குழுக்களை அமைத்து சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துள்ளது. ஆனால் தீர்மானம் வந்தாலும் அதனை செயற்படுத்துவதில்லை.

தற்போதைய ஜனாதிபதி எங்களுடன் இருந்தவர். அவர் காலத்தை இழுத்தடிப்பதில் திறமையானவரே. எவரும் இங்கு அமைக்கப்படும் குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறான காலத்தை இழுத்தடிக்கும் விடயங்களுக்கு நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.