;
Athirady Tamil News

ஐ.ஐ.டி. மாணவி தேர்வுக்கு பயந்து தற்கொலை- பெற்றோருக்கு உருக்கமான கடிதம்..!!

0

ஆந்திர மாநிலம் மன்னியம் மாவட்டம், சாலூரு பட்டணத்தை சேர்ந்தவர் அரிநாத் ஆச்சாரி. இவரது மகள் ரோஷினி (வயது 17). இவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் எச்சர்லா பகுதியில் உள்ள ஐ.ஐ.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். தற்போது ஐ.ஐ.டி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரிக்கு சென்ற ரோஷினி தேர்வு எழுதிவிட்டு, தேர்வு நேரம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே விடுதிக்கு வந்தார். அப்போது விடுதியில் மாணவிகள் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்த சக மாணவிகள் ரோஷினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் எச்சர்லா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரோஷினி பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரோஷினி தங்கி இருந்த அறையில் அவர் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. என்னால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியாததால் முதலாம் ஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றது உங்களை மன வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உங்களது கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த ஆண்டும் குறைந்த மதிப்பெண் பெற்று விடுவேனோ என்ற அச்சம் வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். உங்களை விட்டு பிரிந்து செல்வது மனதுக்கு வருத்தமாக உள்ளது. என்னை மன்னித்து விடுங்கள். தம்பியை நன்றாக படிக்க வையுங்கள் என கூறியுள்ளார். தற்கொலை செய்து கொண்ட ரோஷினிக்கு இன்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் கொண்டாடிய வேண்டிய ரோஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் சக மாணவிகள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.