;
Athirady Tamil News

முஸ்லிம் கட்சிகளின் இணைவு எவ்வாறு அமைய வேண்டும்?

0

மொஹமட் பாதுஷா

முஸ்லிம் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் இரு ‘காங்கிரஸ்களின்’ தலைவர்கள் ஒன்றிணையவுள்ளதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்தி முஸ்லிம் சமூகத்திற்குள் கடந்த இரு தினங்களாகப் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தப் பின்னணியில், றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும் அடுத்த மாகாண சபை தேர்தல் வரையும் இணைந்து செயற்படும் என்று பேச்சடிபடுகின்றது.

இந்தச் செய்தி, இந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம், முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றும் சமூகத்தின் உரிமைகளை, அபிலாஷைகளை வென்றெடுக்கின்ற விடயத்தில் அவர்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்றும் நீண்டகாலமாக எதிர்பார்த்து இருந்தமையினாலாகும்.

ஹக்கீமும் அதாவுல்லாவும் இணைந்தால், இரு தரப்பிற்கும் குறிப்பிட்ட பிரதேசங்களில் அரசியல் நன்மைகள் கிடைக்கும் என்பதையும், றிசாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம் என்றும் கருதலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அரசியலுக்காக அல்லது தேர்தல்களை மையமாகக் கொண்டு அல்லாமல் சமூகத்திற்காக, முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முஸ்லிம் அணிகளிடையே ஒரு மிதமான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் உண்மையான எதிர்பார்ப்பாகும். அது நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

ஆனால், தேர்தலுக்கான கூட்டுகள் அல்லது ஆட்சியமைப்பதில் கூட்டுகளே இதுவரை காலமும் சாத்தியமாகி வருகின்றன. ஏனைய காலங்களில் மக்களைப் பிரித்தாளுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர்.

இதனை அண்மையில் ஒரு முஸ்லிம் தலைவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு இருந்தார்.தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துப் பார்த்தால், ஏனைய பல தமிழ்க் கட்சிகள் கடந்த காலங்களில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்டன.

சில இயக்கங்கள் முஸ்லிம்கள், சிங்கள மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், அநியாயமிழைப்புக்களிலும் ஈடுபட்டன. ஏன் தமிழர்கள் கூட இறுக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்தக் கட்சிகள் எல்லாம் தேசிய நீரோட்டத்திற்கு வந்து விட்டன. பல அணிகளை உள்ளடக்கிய பலமான ஒரு அணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. இப்போது வேறு சில கூட்டணிகளும் உருவாகியுள்ளன.

ஒவ்வொரு தமிழ்க் கட்சிக்கும் வேறு தலைவர்களும் வெவ்வேறு கொள்கைகளும் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் முரண்படுகின்றன. ஆனால், தமிழ் மக்களின் விவகாரங்களில் ஒருமித்துச் செயற்படுகின்றன. இதுதான் அரசியலாகும்.

தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக அரசியல் களத்தில் பேசினாலும், எல்லாவற்றினதும் இலக்கு ஒன்றாக இருப்பதைக் காண்கின்றோம். அதாவது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அவை ஒருமித்துச் செயற்படுகின்றன.

இப்படியான ஒரு ஏற்பாடே முஸ்லிம் அரசியலிலும் தேவைப்படுகின்றது.
முஸ்லிம் கட்சிகள், தலைவர்களைப் பாதுகாப்பதற்காக அன்றி சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான கூட்டுக்களே தேவைப்படுகின்றன.

முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் வழியில் உருவானவை. ஆனால், இப்போது அரசியலில் அல்லது உயிருடன் இல்லாத ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர மற்ற எல்லோருமே, ஹக்கீம் இக்கட்சியின் தலைவராக வந்த பிறகு முரண்பட்டு; வெளியேறியவர்கள் ஆவர்.

அத்துடன், ஒவ்வொருவரும் மக்களைத் துண்டாடி அவர்களை ஒரு குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டின் கீழ் கட்டிப் போட்டுள்ளார்கள். எனவே, இரு தரப்பு அரசியல்வாதிகளும் பரஸ்பரம் நம்புவது என்பது சாத்தியமற்றதாக இருந்து வருகின்றது.

இவ்வாறான பல காரணங்களினாலேயே கடந்த காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுக்குலைந்த பிறகு, கூட்டமைப்பு பற்றிய அபிப்பிராயங்களும் மாறி விட்டுள்ளதாகத் தெரிகின்றது.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் கட்சிகளிடையே இப்போது பலமான ஒரு கூட்டமைப்பு இல்லாவிட்டாலும் அவர்களது காணப்படும் ஒருமைப்பாடு, ஒன்றிணைந்த அழுத்தம் கொடுக்கும் போக்கு, ஒருமித்த சித்தாந்தங்கள் ஒரு பலமான செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன.

இப்படியான ஒரு முயற்சியே முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் அவசியமாகின்றது. அதுதான் நடைமுறைச் சாத்தியமானதும் கூட.மு.கா. தலைவர் ஹக்கீமும் தே.கா. தலைவர் அதாவுல்லாவும் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள் என்றால், அது நல்ல விடயமே.

இதனை யாரும் மறுக்கவியலாது. இருப்பினும், இது இரு கட்சிகளும் இணைவது பற்றிய சந்திப்பல்ல. முதற்கட்டமாக, இரண்டொரு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது பற்றியதாகவே தெரிகின்றது.

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கிழக்கில் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியால் ஏற்படுத்தப்படக் கூடிய போட்டிக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்த பலத்தை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.

அந்த வகையில், இது நிச்சயம் ஒரு நல்லுறவுக்கு வழிவகுக்கும். ஒரு நல்ல ஆரம்பமாக அமையலாம். ஆனால், இருவரும் முற்றாக இணைந்து
விட்டார்கள் என்பதும், ‘இவர்தான்’ முதலமைச்சர் வேட்பாளர் என்பதும், இப்போதைக்குக் கற்பனைக் கதை என்றே கூறலாம்.

இரு காங்கிரஸ்களோ அல்லது மூன்று காங்கிரஸ் கட்சிகள் மற்றும்
இதர முஸ்லிம் அணிகளோ தமது அடையாளத்தை ஒருபுறம் வைத்து விட்டு, முற்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து விடுவது நடைமுறைச் சாத்தியமற்றது.

பதவிகள், அந்தஸ்து, அதிகாரம், கௌரவம் என்பவற்றையும் தாண்டி
அவரவர் ஏற்கெனவே மக்களிடம் கூறிய கற்பிதங்களே சவாலாக அமைந்து விடும். எனவே, அப்படியொரு அபூர்வம் நடந்தாலும், அது நீண்டகாலத்திற்கு நீடிக்காது.

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இலக்குகளை அடைவதற்காக, அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகப் பல முஸ்லிம் கட்சிகள் ஒரே கூரையின் கீழ் சந்தித்து. ஒருமித்த நிலைப்பாட்டில் முன் செல்வதும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் ஒப்பீட்டளவில்
நடைமுறைச் சாத்தியமானது.

அதனையே முஸ்லிம் கட்சிகள், அணிகள் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கும் வருடக் கணக்காக தீர்க்கப்படாத சிக்கல்கள் உள்ளன.

தமிழ் ஆயுதக் குழுக்களும், இந்திய இராணுவமும் செய்த அநியாயங்கள்,
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், கடத்தல், கப்பம் பெறல், முஸ்லிம் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட உயிர் பறிப்புக்கள், குரக்கள்மடம் ஹாஜிகள் படுகொலை என பல மீறல்களுக்கு நீதி இன்னும் நிலைநாட்டப்படவில்லை.

2010ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதன் பின்னரும் இனவாதிகளால் முஸ்லிம்களுக்குப் பல வழிகளிலும் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள், கலவரங்கள், கருத்துருவாக்கங்களுக்கான
நீதி எந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.

மிக முக்கியமாக, முஸ்லிம்களுக்கு இலட்சக்கணக்கான ஏக்கர் தொடர்பான காணிப் பிரச்சினைகள் உள்ளன. சனத்தொகை வீதாசாரத்திற்கு அமையக் காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சொந்தக் காணிகளை உரிமை கொண்டாடுவதற்காகவே பல
வருடங்களாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் போராடி வருகின்றனர்.

அதேபோன்று, முஸ்லிம் தேசியம், இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கான சமஷ்டி அல்லது மர்ஹூம் அஷ்ரப் தொடர்ந்து வலியுறுத்திய அதிகார அலகு பற்றிக் கடந்த இருபது வருடங்களில் முஸ்லிம் தலைவர்கள் எம்.பி.க்கள் முதல் இப்போது எம்.பிக்களாக இருப்பவர்கள் வரை யாரும் வலியுறுத்தவில்லை.

இந்தப் பின்னணியில், ஏதோ முஸ்லிம்களுக்கு நீண்டகாலப்
பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது போலவும், நாட்டில் எல்லா மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளைத் தவிர, பிரத்தியேகமான எந்த தேவைப்பாடுகளும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பது போலவும் ஒரு தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் போலி விம்பத்தை உடைத்தெறிந்து, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை சரியான வழியில் முன்னெடுப்பதற்கும், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை ஒருமித்த குரலில் வலியுறுத்துவதற்கும் முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள் ஒருமித்துச் செயற்பட வேண்டிய காலத்தின் தேவை எழுந்துள்ளது. அப்படியான ஒரு கூட்டே தேவைப்படுகின்றது.

தனிப்பட்ட ரீதியில் கட்சிகள் இலாபம் பெறுவதற்காகவோ தலைவர்கள் தமது கோட்டைகளைக் காப்பாற்றுவதற்காகவோ தேர்தலை மட்டும் இலக்கு வைத்ததாகவோ இந்த இணைவு இருக்கக் கூடாது. மாறாக, முஸ்லிம் சமூகத்தின் பேசப்படாத அபிலாஷைகளை வெள்றெடுப்பதற்கான ஒரு ஒன்றிணைவாக அது அமைவது அவசியம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.