;
Athirady Tamil News

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது; நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைக்கும் – ஜனாதிபதி!!

0

பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பின் தன்மைக்கும், தற்போதைய சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் ஒப்பீட்டளவில் ஸ்தீரமடைந்துள்ளது. ஆகவே, இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நெருக்கடியான சூழ்நிலையில் தலைமைத்துவத்தை ஏற்பதை தற்போதைய இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சூழல் சிறந்த எதிர்காலத்துக்கு பாடங்களை கற்பிக்கும். எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய நெருக்கடி காணப்பட்ட பின்னணியில் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றேன்.

அனைத்து சவால்களையும் ஒரு போட்டியாக கருதி வெற்றி பெற்றுள்ளோம். பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த கடந்த 7 மாத காலமாக எடுத்த கடுமையான தீர்மானங்கள் சிறந்த பெறுபேற்றை வழங்கியுள்ளன.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை பொருளாதாரத்தில் ஸ்தீரமான நாடு என்ற உறுதிப்பாட்டை பெறும்.

2048ஆம் ஆண்டு இலங்கை சுபீட்சமான நாடு என்ற இலக்கை அடைய 25 வருடகால நிலையான கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

தற்போதைய இளம் தலைமுறையினர் நாட்டுக்காக துடிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்.

2022ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பில் காணப்பட்ட நிலைமைக்கும், தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

7 மாத காலத்துக்குள் அனைத்து கட்டமைப்புக்களும் ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப் பெறுகின்றன.

பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன. ஆகவே, நாம் வங்குரோத்து நிலையில் தற்போது இல்லை.

கடன் நிவாரணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன். எதிர்வரும் நாட்களில் சிறந்த வெற்றி எமக்கு கிடைக்கப்பெறும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு இக்கட்டான சூழலில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடுவதற்கான சூழலை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது.

இலங்கை வங்குரோத்து நிலையில் தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் செலுத்த வேண்டிய சகல அரச முறை கடன்களுக்கும் 10 ஆண்டுகால அவகாசம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கையிருப்பு அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதல்ல. ஆகவே, வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக பெற வேண்டும்.

4 வருட காலத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யுமாறும், 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் அரச வருமானத்தை மேலதிகமாக ஈட்டிக்கொள்ளுமாறும் நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளோம்.

நிலையான பொருளாதார மேம்பாடு அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக உள்ளது.

2048ஆம் ஆண்டு இலங்கை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்பப்படும். பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி ‘நாடு’ என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் பல விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டுள்ளார்கள். அதன் பலன் மக்களுக்கு நிச்சயம் கிடைக்கப் பெறும். ‘நாடு’ என்ற ரீதியில் கௌரவமாக வாழும் சூழலை ஏற்படுத்துவேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.