உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிப்பு!!

உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை.
ஆனால் இதுகுறித்து செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம்,” இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.