;
Athirady Tamil News

மாற்றுவலுவுள்ளோருக்கு வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பதிந்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

0

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திரு.ஆர்.சிவகரன் தலைமையில் நேற்று (06.03.2025) மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய இரண்டு எஞ்சின்களை கொண்ட மோட்டார் சைக்கிளை வடிவமைப்பு செய்து மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைத்தமை சிறப்பான விடயம் எனவும் அதிகளவில் மாற்றுவலுவுள்ள பெண்கள் இவ் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுகொள்ள வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இத்தகைய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டு அதற்கென தனித்துவமாக இலக்கத்தகடுகள் உருவாக்கப்பட்டிருப்பது எமது மாவட்டத்தின் தொழில்நுட்ப அறிவினை பறைசாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பன ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன.அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினை இன்றையதினம் அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைதடி மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது மாற்றுவலுவுள்ளோரினால், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளை திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்குரிய அடிச்சட்ட இலக்கங்கள் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த வாகனங்களிற்கு 325-6000 என்ற தொடர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு வாகனத்தை செலுத்துவதற்கான அங்கீகாரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலாக நடைபெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,உதவி மாவட்ட செயலாளர் ,பிரதம கணக்காளர் ,மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ,சிறுவர் நன்னடத்தை மாகாண பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாற்றுவலுவுள்ளோர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.