;
Athirady Tamil News

பலூச். விடுதலைப் படை தாக்குதல்: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலி

0

பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர்.

தி பலூசிஸ்தான் போஸ்ட் தெரிவித்திருப்பதாவது, ஜீயாண்ட் பலோச், குழுவின் போராளிகள் மஸ்துங், கலாட், ஜமுரன், புலேடா மற்றும் குவெட்டா உள்பட பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர்.

மேலும் , உளவுத்துறையுடன் தொடர்புடைய ராணுவ சொத்துகளும் கணிசமான சேதம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ஜூலை 22ஆம் தேதி காலாட்டின் கோஹாக் பகுதியில் மிகவும் குறிப்பிடத்தக்க மோதல்களில் ஒன்று நடந்ததாக பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தெரிவித்துள்ளது.

அங்கு முன்னேற முயன்ற பாகிஸ்தான் படைகள் பதுங்கியிருந்து தாக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் மூன்று இராணுவ வாகனங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்த 13 பேர் சுற்றிவளைக்கப்பட்டு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் தங்களுக்கென தனி நாடு வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலை படையினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக கடந்த மே மாதம் பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்திருந்தார்.

ஆனால், பாகிஸ்தான் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீதும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.