அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி
அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசியை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இதோ, நாம் அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கவுள்ளோம்.
10 கிலோ வீதம் இரண்டு பொதிகள்
விவசாய அமைச்சினால் ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோ அரிசி வழங்கப்படும். 10 கிலோ வீதம் இரண்டு பொதிகள் சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி.
தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் வழங்கப்படும். இதற்காக வவுச்சர் ஒன்று வழங்கப்படும். இதனை சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைவரும் விவசாயிகளின் அரிசியை உண்ண வேண்டும் அல்லவா? அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி விநியோகிப்பதற்கான திட்டமே இவ்வாறு வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.