;
Athirady Tamil News

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

0

காஸாவில், இஸ்ரேல் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப்படையின் தலைவர் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் உருவாக்கியதாகக் கூறப்படும் ‘பாப்புலர் ஃபோர்ஸ்’ எனும் ஆயுதக்குழுவின் தலைவர் யாசர் அபு ஷபாப் (வயது 31).

காஸாவில், பாலஸ்தீனர்களுக்கு வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிப் பொருள்களைத் திருடியதாகவும், போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் இவரது ஆயுதக்குழுவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காஸாவில் இன்று (டிச. 4) ஆயுதக்குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தாக்குதல்களில் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் கொல்லப்பட்டதாக தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இருப்பினும், யாசர் அபு ஷபாபின் மரணம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, காஸாவில் ஹமாஸுடன் இணைந்த பாதுகாப்புப் படையான ராடா படையினர், யாசர் அபு ஷபாபின் புகைப்படத்தை வெளியிட்டு, “நாங்கள் உங்களிடம் ஏற்கெனவே சொன்னது, இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக யாசர் அபு ஷபாப், ஹமாஸ் படைகளால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.