சொகுசு பஸ் தீப்பிடித்து கோர விபத்து – 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் சொகுசு பேருந்தில் லொறி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக பேருந்து விபத்து
கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று, நேற்று அதிகாலையில் கோகர்ணா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சித்ரதுர்கா(Chitradurga) மாவட்டம் ஜவனகொண்டனஹள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லொறி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து தீ பற்றியதில், உடல் கருகி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
விபத்துக்கான காரணம்?
காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.