;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலி

0

காபூல்

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் 7 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானிய நில பகுதி பயன்படுத்தப்படுகிறது என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனை நிறுத்தும்படியும் கூறி வருகிறது. சமீபத்தில் இஸ்லாமாபாத் நகரில் நடந்த தாக்குதல்களுக்கு அந்நாட்டை பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலி
ஆனால், இதனை ஆப்கானிஸ்தான் மறுத்தது. இதுபோன்று பொதுமக்கள் பலியாக கூடிய தாக்குதல்களை நாங்கள் நடத்தமாட்டோம் என கூறியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது விமான படையை கொண்டு பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பெர்மால் மற்றும் ஆர்குன் மாவட்டங்களின் மீது பாகிஸ்தான் விமானங்கள், வான்வழியே தாக்குதல் நடத்தின.

பக்திகா மாகாணத்தில் மதகுருமார்களுக்கான கல்வி நிலையம் மீதும் தாக்குதல் நடந்தது. இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி பாசோத் மற்றும் கானி கேல் மாவட்டங்களின் மீதும் பாகிஸ்தானிய ஜெட் விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தின.

இதனை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஊடக தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இதுபற்றி பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ரமலானின்போது சமீபத்தில் இஸ்லாமாபாத், பஜாவர் மற்றும் பன்னு நகரங்களில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பித்னா அல் குவாரிஜ் மற்றும் அதன் கிளை அமைப்புகள், டேயிஷ் கோரசான் புரோவின்ஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் 7 முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் தாக்கி அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனினும், பாகிஸ்தானின் உள்துறை மந்திரி தலால் சவுத்ரி கூறும்போது 70 பயங்கரவாதிகள் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர் என கூறினார்.

இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித்தும் உறுதி செய்துள்ளார். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் பலியாகி உள்ளனர். நிறைய பேர் காயமடைந்தும் உள்ளனர் என தெரிவித்து இருக்கிறார். இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்களும், ஜே.எப்.-17 தண்டர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனை பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.