;
Athirady Tamil News

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! – ஈரான் அறிவிப்பு!

0

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கும் ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த அனுமதி தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“லெபனானில் அமலுக்கு வந்துள்ள போர்நிறுத்தத்தின் அடிப்படையில், போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம்வரை அனைத்து வர்த்தக கப்பல்களின் போக்குவரத்துக்கும் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்பட்டு, இயல்பான கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முழுவதுமாக முடக்கின.

இத்துடன், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹவுதி கிளர்ச்சிப் படையின் இந்தப் போரில் களமிறங்கின. இதையடுத்து, லெபனானின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.