;
Athirady Tamil News

நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து

0

‘எனது நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்ட அதிபா் டிரம்ப், மேற்காசிய நிலவரம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் 40 நிமிஷங்கள் ஆலோசித்தனா்.

இந்நிலையில், வாஷிங்டனில் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘இந்தியாவில் உள்ள எனது நண்பா் மோடி; அவா் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். அண்மையில் அவருடனான தொலைபேசி வழி கலந்துரையாடல் வெகு சிறப்பாக அமைந்தது’ என்றாா்.

அமெரிக்க இந்திய வா்த்தக ஒப்பந்தம், மேற்காசிய போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயா்வு, எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை குறித்து இரு தலைவா்களும் பேசியதாகத் தெரிகிறது. ஹோா்முஸ் நீரிணை பாதுகாப்பாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் திறந்தும் இருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினா்.

இந்த ஆண்டு டிரம்ப்-மோடி இடையே இதுவரை மூன்று முறை ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதுவும் கடந்த பிப்ரவரி 28-இல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய பிறகு இரு தலைவா்களும் இருமுறை ஆலோசித்துள்ளனா்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஏப். 7-இல் இரு வார தற்காலிக போா்நிறுத்தத்தை அறிவித்தன. பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் இருதரப்பும் ஏற்கும் தீா்வு எட்டப்படவில்லை. எனினும், போா் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்தாா்.

இதனிடையே, வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த ஏப். 20-ஆம் தேதி இந்திய குழு அமெரிக்கா செல்கிறது. ஒப்பந்தம் தொடா்பாக மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பின்னா், இருநாட்டு குழுக்களும் நேரடியாகச் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.