;
Athirady Tamil News

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

0

மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது.

மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின் அவுங் ஹிலைங் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 180 வெளிநாட்டவர் உள்பட 4,500 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த புதிய நடவடிக்கையின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மியான்மரின் முன்னாள் அதிபர் வின் மியிண்ட் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராகப் பதவி வகித்த வின் மியிண்ட், முன்னாள் பிரதமர் ஆவுங் சன் சூகியின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுகிறார். மேலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் அதிபர் மியிண்ட் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2023 ஆம் ஆண்டு தண்டனைக் காலம் 8 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

இதையடுத்து, விடுதலைச் செய்யப்பட்ட கைதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், குறைக்கப்பட்ட தண்டனைக் காலத்துடன் சேர்த்து புதிய குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாகவும், ஆயுள் தண்டனையின் காலம் 40 ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள 80 வயதான முன்னாள் பிரதமர் ஆவுங் சன் சூகியின் விடுதலை குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.