வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றை இடித்து அழிக்கும் செயற்பாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக முரண்படவுள்ளமையினை வீடியோ பதிவு செய்யமாறு தெரிவித்துவிட்டு தவிசாளரை நோக்கி அவதூறுப்படுத்தியதுடன் கடமைக்கு இடையூறுப்படுத்தினார்.
அவ்விடத்தில் தவிசாளர் தங்களுக்கு எதாவது பிரச்சினைகள் இருப்பின் தம்மை அலுவலகத்தில் முறைப்படி அணுகுமாறு தெரிவித்தவிட்டு கடமையில் நின்றார்;. இந் நிலையில் பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தவிசாளரை மரியாதைக்குறைவாக எச்சரித்திருந்ததுடன் கடமைக்கு இடையூறகாக செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அந் நபருக்கு எதிராக தவிசாளர் வாக்குமூலமளித்திருந்தார்.
இந் நிலையில் தவிசாளரின் கடமைக்கு இடையூறுவிளைவித்தமைக்காகக் கைதுசெய்யப்பட்டவரை இன்று செவ்வாய்க்கிழமை மேலதிக நீதவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிசார் முற்படுத்தியதுடன் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் எதிராளிக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்று எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியல் உத்தரவிட்டது. தவிசாளர் சார்பாக சட்டத்தரணி மோகனேஸ்வரன் ரமணனும் சந்தேகநபர் சார்பாக சட்த்தரணிகளான லக்சன் செல்வராஜா மற்றும் லவகாந் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.