யாழில் எரிபொருள் முறைகேடு: ஆதாரத்துடன் புகார் அளிக்க விசேட தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு எரிபொருள் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பதுக்கல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆதாரத்துடன் முன்வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
119 அல்லது 021 222 2221 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் தவிர்ந்து மேலதிக போத்தல்களில் மற்றும் எரிபொருள் கொள்கலன்களில் / தாங்கிகளில் எரிபொருள் நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் எங்காவது அவ்வாறு எரிபொருள் வழங்கப்படின் உடனே மேற்குறிப்பிட்ட இலக்கங்களிற்கு அறிவிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாரேனும் வாகனங்களில் எரிபொருளை நிரப்பியபின் அதனை வேறு கொள்கலங்களிற்கு மாற்றிவிட்டு மீள எரிபொருள் பெற வந்தாலோ அல்லது வீடுகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ உடனே மேற்படி இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
தமது முறைப்பாடுகள் ஆதாரத்தோடு வழங்கப்படும்போது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமது முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் தவறுகளை சுட்டிக்காட்ட முன்வந்தால் மட்டுமே இந்தச் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க முடியும்.
இதனால் பல உண்மையான தேவையுடையோர் எரிபொருளை நீதியாகப் பெற்று பயனடைய இது வழிசமைக்கும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.