;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் களமிறங்கிய CID ; 3மணி நேரம் விசாரிக்கப்பட்ட துணைவேந்தர், பதிவாளர்

0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் 3 மணி நேரம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது.

விசாரணை அறிக்கை
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.

குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

பொலிஸார் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.