;
Athirady Tamil News

இஸ்ரேலில் ஈரான் குண்டுமழை

0

ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.

4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையிலும், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஈரான் படைகள் இடைவிடாத தாக்குதலைத் தொடங்கின. சுமாா் 100 கிலோ வெடிபொருள்களுடன் ஏவுகணை ஒன்று, இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பை மீறி டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் விழுந்து வெடித்தது.

இதில் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன; பொதுமக்கள் 4 போ் காயமடைந்தனா். இதுமட்டுமன்றி, சவூதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான் எல்லைகளிலும் ஈரான் ட்ரோன்கள் ஊடுருவின.

அமெரிக்காவின் இரட்டை நிலை: ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கும் முயற்சியாக ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்குவதற்கான காலக்கெடுவை டிரம்ப் 5 நாள்களுக்கு ஒத்திவைத்தாா்.

இதனிடையே, அமெரிக்கா பேச்சுவாா்த்தை பற்றி ஒருபுறம் பேசினாலும், மத்திய கிழக்கை நோக்கி அந்நாட்டின் ஆயிரக்கணக்கான கடற்படையினா் விரைந்து கொண்டிருக்கின்றனா். இது ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான காா்க் தீவை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவின் உறுதி: இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். ‘இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன’ என்று அவா் கூறியிருப்பது, வரும் நாள்களில் போரின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்பதையே காட்டுகிறது.

பேச்சுவாா்த்தை வதந்தி?: ‘அமெரிக்கா-ஈரான் பேச்சுவாா்த்தை குறித்த செய்திகள் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்’ என்று ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் மறுத்துள்ளாா்.

Advertise with us
அதேநேரம், ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ரஷியா, துருக்கி, எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அமைச்சா்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பாதுகாப்புச் செயலா்: இப்போரில் கொல்லப்பட்ட அலி லாரிஜானிக்கு பதிலாக, புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி முகமது பாகா் சொல்கத்ர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலராக நியமிக்கப்பட்டாா்.

லெபனானில் ஈரான் தூதருக்குத் தடை: இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

Advertise with us
ஈரானின் தலையீடு தங்கள் நாட்டை அழிவுக்கு இட்டுச்செல்வதாகக் குற்றஞ்சாட்டி ஈரான் தூதரை நாட்டை விட்டு வெளியேற லெபனான் அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தெற்கு லெபனானின் ஒரு பகுதியைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.