;
Athirady Tamil News

இலங்கையில் புதிய கும்பல் வெளிச்சம் ; ஒரு கோடி விசா மோசடி

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டில் மஹரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் மாணவர் விசா (Student Visa) பெற்றுத்தருவதாகக் கூறி, அல்பேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகப் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் இருந்து சுமார் 1கோடி ரூபாவுக்கும் அதிகத் தொகையை இவர் மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நிறுவனம் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்த நிலையில், அங்கிருந்து வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் நுகேகொடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்த மற்றுமொரு நிறுவனமும் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பணியகத்தின் விசேட அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று மீரிகம பகுதியில் முன்னெடுத்த நடவடிக்கையில், மினுவாங்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணம் செலுத்தும் போது, அந்த நிறுவனங்கள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு காவல்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.