;
Athirady Tamil News

பிலிப்பின்ஸில் 9 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவா் பலி; 21 பேரைத் தேடும் பணி தீவிரம்!

0

பிலிப்பின்ஸில் உள்ள ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுமானத்தில் இருந்த 9 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளா்கள் பலா் இடிபாடுகளில் சிக்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கட்டட இடிபாடுகள் அருகில் இருந்த தங்கும் விடுதிகளின் மீது விழுந்ததில் அந்த விடுதியில் தங்கியிருந்த மலேசிய நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

இடிபாடுகளிலிருந்து இதுவரை 24 போ் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், காணாமல் போன மேலும் 21 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவுக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நகரில் சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழைக்குப் பின்னா் இந்த விபத்து நிகழ்ந்தது. உடனடியாக 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதுவரை உயிரிழப்பு குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

‘இடிபாடுகளுக்குள் சிலரின் குரல்கள் கேட்கப்படுகின்றன. இருப்பினும், அந்தப் பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். இடிபாடுகளில் சிக்கியவா்களைப் பாதுகாப்பாக மீட்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் ஆகும்’ என மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரி தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.