லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 4 மருத்துவ பணியாளர்கள் பலி
பெய்ரூட்,
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களா கத் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள மைபடோன் கிராமத்தில் இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து 3 முறை வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்த கொடூரத் தாக்குதலில், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற 4 மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படு காயமடைந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ வாகனங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் செயல்படுவதாக லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த போரில் இதுவரை 91 மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக லெபனானில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.