தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் தவறாக நடந்துகொண்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மேற்கு பாம் பீச்சில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கவில்லை. அவர்கள் (ஈரானியர்கள்) ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவிடம் முன்மொழிந்திருக்கின்றனர்.
நான் அதைச் சொல்ல விரும்பவில்லை. அதாவது, அவர்கள் தவறாக நடந்துகொண்டால், ஏதேனும் தவறு செய்தால், இப்போதைக்கு நாம் பார்ப்போம். ஆனால், அது நடப்பதற்கான சாத்தியம் உள்ளது” என்றார்.
மேலும், செய்தியாளர்களை நோக்கி, “நாம் ஈரானியர்களைக் கடுமையாகத் தாக்கி, நிரந்தரமாக அழித்துவிட வேண்டுமா? அல்லது ஒரு உடன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து தனது சொந்த சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு ஒன்றையும் வெளியுள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரான் இப்போது எங்களுக்கு அனுப்பியுள்ள திட்டத்தை நான் விரைவில் ஆய்வு செய்யவிருக்கிறேன். ஆனால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
கடந்த 47 ஆண்டுகளாக மனிதகுலத்திற்கும் உலகிற்கும் அவர்கள் செய்த கொடுமைகளுக்கும் போதுமான விலையை அவர்கள் கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் மதகுரு உள்பட பலர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவு நாடுகள், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஏப். 8 ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.