திருகோணமலையில் இரு கடைகளில் துணிகரக் கொள்ளைச் சம்பவம்
திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் அரங்கேறியுள்ள துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (05) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகளின் பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களைக் கொண்டு திருகோணமலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றவாளியை விரைவாகக் கண்டறிய பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் நாடியுள்ளனர். இந்தக் காணொளியில் அல்லது புகைப்படத்தில் காணப்படும் நபரை அடையாளம் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.