;
Athirady Tamil News

வங்கதேச இறையாண்மைக்கு சீனா ஆதரவு

0

வங்கதேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், அந்நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நிராகரிப்பதற்கும் சீனா முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.

வங்கதேச பிரதமராக கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் தாரிக் ரஹ்மானை, பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தாா்.

இதேபோல், ‘ஒரே சீனா’ கொள்கைக்கு வங்கதேசம் உறுதியான ஆதரவு அளிப்பதாகவும், தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிப்பதாகவும் தாரிக் ரஹ்மான் தெரிவித்தாா்.

இச்சந்திப்பின்போது, சீனாவின் லட்சிய திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வங்கதேசம், மியான்மா், சீனாவை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவது குறித்தும் ஷி ஜின்பிங் முன்மொழிந்தாா்.

இப்பயணத்தின் முக்கிய அம்சமாக, வங்கதேசத்தின் மிக முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் தீஸ்தா நதிநீா் மேலாண்மை மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், வா்த்தகம், முதலீடு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.