;
Athirady Tamil News

தென்கொரியாவுடன் இணையும் எண்ணமில்லை: அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திய வடகொரியா

0

தென்கொரியாவுடன் இனி எக்காலத்திலும் இணையப் போவதில்லை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், வடகொரியா தனது அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் அங்கமான இவ்விரு நாடுகளும் தனித்தனி இறையாண்மை கொண்ட தேசங்கள் என்றும், தென்கொரியா தனது நாட்டின் ‘முதன்மை எதிரி’ என்றும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அது சட்டபூா்வமாக அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. வடகொரிய நாடாளுமன்றமும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி, வடகொரியாவின் நிலப்பரப்பு என்பது வடக்கே சீனா மற்றும் ரஷியாவையும், தெற்கே தென்கொரியாவையும் எல்லையாகக் கொண்டது என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரிய தீபகற்பம் முழுவதும் ஒரே தேசமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக தனது தெற்கு எல்லையை வடகொரியா தனித்து அடையாளப்படுத்தியுள்ளது.

இருப்பினும் கடல்சாா் எல்லைகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, ஜப்பான்-கொரிய தீபகற்பம் இடையிலான மஞ்சள் கடல் பகுதியில் உள்ள சா்ச்சைக்குரிய எல்லைக்கோடுகள் குறித்து இதில் தெளிவான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிம் ஜோங் உன்னின் அதிகாரமும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இனி அவரின் பதவி ‘நாட்டின் தலைவா்’ (ஹெட் ஆஃப் ஸ்டேட்) என மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், சா்வதேச அளவில் வட கொரியாவின் அதிகாரப்பூா்வ பிரதிநிதியாக அவா் அங்கீகரிக்கப்படுகிறாா்.

பாதுகாப்பு தொடா்பான பிரிவில், வட கொரியா ஒரு ‘பொறுப்புள்ள அணு ஆயுத நாடு’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்களையும், வளா்ச்சி உரிமைகளையும் பாதுகாக்கவும், போரைத் தடுத்து பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் அணு ஆயுத மேம்பாடு தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த அணு ஆயுதப் படைகளையும் வழிநடத்தும் அதிகாரம் கிம் ஜோங் உன் வசம் மட்டுமே இருக்கும் என்பதும் சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.