கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரசேன ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரசேன தூக்கிடுவதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பட்டி பான்ஸ் பிளேஸிலிருந்து கொள்ளுப்பிட்டி வீட்டுக்கு பணியாளர் ஒருவரின் மூலம் தருவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி இவ்வாறு குறித்த பட்டி தருவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பணியாளர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்தப் பட்டி வீட்டிலிருந்து பணியாளர் மூலம் தருவிக்கப்பட்டமையானது ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினை வலுப்படுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட போது அவரது கழுத்தில் இருந்த பட்டியானது பான்ஸ் பிளேஸ் வீட்டிலிருந்து கொள்ளுப்பிட்டி வீட்டுக்கு தருவிக்கப்பட்டது என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்திரசேன தனது சில ஆடைகளுடன் இந்தப் பட்டியையும் எடுத்து வருமாறு கோரியதாக பணியாளர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சந்திரசேன, இந்த பட்டியை ஜிம்மிற்கு அடிக்கடி எடுத்துச் செல்வதனால் அது குறித்து தமக்கு சந்தேகம் ஏற்படவில்லை என குறித்த பணியாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் கபில சந்திரசேன எவ்வாறு மரணித்தார் என்பது தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சந்திரசேனவின் உடல் பாகங்கள் இரசாயன ஆய்வுகூட பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட முன்னர் அவருக்கு இறுதியாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.