;
Athirady Tamil News

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் சோகம்

0

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த மேலும் ஒரு தாய் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்மணி நேற்று சனிக்கிழமை (16) காலமானார். அவர் 05.09.1951 அன்று பிறந்தவர்.

போராட்டம்
தனது குடும்ப உறவுக்காக மட்டுமன்றி, வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்காக நீதியை கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் முயற்சியாக மட்டும் அல்லாது, இனி எவரும் இத்தகைய நிலைக்கு ஆளாகாதவாறு “மீள நிகழாமையை” உறுதி செய்யும் மனித உரிமைப் போராட்டமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“இன்று வாழும் அனைத்து தமிழர்களும் வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எங்கள் போராட்டம் தொடர்கிறது.

ஆனால் சமூகம் அதனை போதுமான அளவில் கவனிக்காமல் கடந்து செல்கிறது” என அவர் போராட்டங்களில் பங்கேற்றபோது அடிக்கடி வலியுறுத்தி வந்ததாக உறவினர்கள் நினைவுகூருகின்றனர்.

வேலுப்பிள்ளை பொன்மணி அவர்களின் மறைவு, நீதி தேடி பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.