;
Athirady Tamil News

நெல்லை கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார்

0

கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில், முக்கிய குற்றச்சாட்டின் கீழ் சுர்ஜித்தின் தாயாரும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி இன்று (2026.05.29) சிபிசிஐடி பொலிஸாரால் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கவின் காதலித்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் சரணடைந்த நிலையில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தையும் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனையும் பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், சுர்ஜித்தின் தாயாரான கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வேண்டும் என கவினின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கிருஷ்ணகுமாரியின் பெயர் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவராக இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்றதிலிருந்து சுமார் 10 மாதங்களுக்கு பின்னர், உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் நான்காவது நபராக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரி, சிபிசிஐடி பொலிஸாரால் திருநெல்வேலி 2ஆம் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.