;
Athirady Tamil News

அரச வங்கியில் காணாமல் போன 35 மில்லியன் ரூபாய் ; வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி முகாமையாளர்

0

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியில் இருந்து ரூ.35 மில்லியன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உதவி முகாமையாளர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (07) வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரை ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியிருந்தது.

வங்கி வளாகத்தில் சோதனை
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 3ஆம் திகதி பல ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 மில்லியன் பணம் திருடப்பட்டதாக ஹொரணை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டமை சி.சி.ரி.வி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கழிவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனிலிருந்து ரூ.17 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.

விசாரணைகளின் அடிப்படையில், உதவி முகாமையாளரும் பாதுகாப்பு ஊழியரும் இணைந்து பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் தொலைபேசி பதிவுகளைப் பெறவும், அவர்களது வீடுகளைச் சோதனையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.