;
Athirady Tamil News

இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

0

இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு ஈரான் தாக்குதலைத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் வலிமைமிக்க ஆயுதப் படைகள், லெபனானின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடியைக் கொடுத்து வந்தது. தெற்கு லெபனானில் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மீண்டும் தொடர்ந்தால் முன்பைவிட கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லெபனானின் பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி சமன்படுத்த முயல்வதை ஏற்க முடியாது என இஸ்ரேல் அதிபர் இன்று காலை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

மேலும், இஸ்ரேல் குடிமக்களை அச்சுறுத்தும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.