சமூக வலைத்தள காதல் வலை ; புலம்பெயர் முதியவரிடம் ரூ.40 இலட்சம் பண மோசடி
லண்டனில் வசித்து வரும் 69 வயதுடைய ஒருவரிடம் சமூக வலைத்தளத்தின் ஊடாக நெருங்கிப் பழகி, 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சின்னத்தம்பி சிவப்பிரகாசம் என்பவரின் மகளால் பொலிஸின் இணையக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் படி, சமூக வலைத்தளத்தில் போலியான கணக்கு ஒன்றைப் பயன்படுத்தி, வேறொரு பெண்ணின் புகைப்படங்களை பதிவேற்றி, சிவப்பிரகாசத்துடன் தொடர்பை ஏற்படுத்திய நபர் அல்லது நபர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தனது தந்தை எந்தவித ஒழுங்கற்ற தொடர்பிலும் ஈடுபடாத நிலையிலும், குறித்த கணக்கிலிருந்து தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அனுப்பப்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்கும், அதனுடன் தொடர்புடைய அடையாள விவரங்களும் போலியானவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
வவுனியாவில் வழங்கப்பட்டிருந்த முகவரியில் தற்போது அந்த நபர் வசிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் தொடர்புகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.