;
Athirady Tamil News

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்குப் பதிலாக அவற்றை வலுப்படுத்துங்கள்

0
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது. தற்போது மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முற்படுத்தனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ச.சிறிபவானந்தராஜா தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்துள்ள புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் எனக் கருத்து வெளியிட்டார்.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் ஆதரவு தெரிவித்தார்.

இலங்கையின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் வருவதாக அரசியல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டது.

இத்தகைய அதிகாரங்களை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மூலம் மாற்ற முடியாது.

மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனில், அதற்கு அரசியலமைப்பில் திருத்தம் அவசியம்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று சட்டத்தைத் திருத்திய பின்னரே அது சாத்தியமாகும். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானதாகும் .

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது.

அந்த அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்க முயற்சிப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிரான செயலாகும்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் பிரிவில் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருக்கின்றது.

அதே பிரச்சினைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன. மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் உடனடியாக தீர்ந்துவிடும் என்ற கருத்து தவறானது.

அதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான வளங்கள், மருத்துவர்கள் மற்றும் நிதி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முயற்சிக்க வேண்டும்

மாகாண சபைகள் திறம்பட இயங்குவதற்கு தேவையான ஆதரவுகளையும் வளங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதிகாரங்களைப் பறிப்பதற்குப் பதிலாக அவற்றை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, அவற்றைச் செயல்திறனுடன் முன்னெடுக்க தேவையான உதவிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொடுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.