;
Athirady Tamil News

தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தர் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

0
தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தர் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!
தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (30.06.2026)யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினதும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினது ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதத்தில் திருவள்ளுவர் மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது.

இந் நிலையில் இந் நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தும் முகமாக நிகழ்வுகளின் பொறுப்புக்கள் பகிர்தளிக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் இருந்து மணிக்கூட்டு சந்தி ஊடாக திருவள்ளுவர் மண்டபத்திற்கு தமிழ் பண்பாட்டு பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபவனி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டதுடன், நிகழ்வில் முன்னெடுக்கப்படவுள்ள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்  க.சிவகரன் ,உதவிமாவட்ட செயலாளர் தர்சினி,உள்ளக மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர்  உ. சிவகாமி,
யாழ்ப்பாண தமிழ் சங்க பெருந்தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாண தமிழ்ச்சங்க உப செயலாளர் யோகேந்திரன் நிவேதன்,
யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் கி.விசாகரூபன், வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஜி.பார்த்தீபன்,
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர்  எஸ்.சிறிவாகீசன், மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் மா. அருள்ச்சந்திரன், தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள மாகாண பொறுப்பதிகாரி  என்.உமானாத், வட மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர், மாவட்ட கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.