இந்திய அமெரிக்கரான முன்னாள் கூகுள் நிர்வாகி சுட்டுக்கொலை: கணவர் கைது!
இந்திய அமெரிக்கரும் முன்னாள் கூகுள் நிர்வாகியுமான ஷீத்தல் தனது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்திய அமெரிக்கரும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியுமான ஷீத்தல் வெர்செசியன் (57) அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடும்பச் சண்டை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஜூலை 7 அன்று அவரின் வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஷீத்தல் பலியானார். இதில், அவர்களது மகன் ஜேசன் வெர்செசியனும் காயமடைந்துள்ளார்.
56 வயதான ஷீத்தலின் கணவர் கிர்க் வெர்செசியன் அன்றைய நாளே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, கடுமையாகத் தாக்கியது மற்றும் குற்றம் நிகழ்த்துகையில் துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஷீத்தலின் உடலில் பலமுறை துப்பாக்கியால் சுட்ட காயங்கள் இருந்துள்ளன. அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.