;
Athirady Tamil News

வடக்கில் மூன்று புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவ இணக்கம்

0

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபயசிங்கவிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கு மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், அதற்காகத் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் பயன்பாடற்ற நிலையில் உள்ள காணிகளைப் பராமரித்தல் மற்றும் அதனை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆளுநரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்காக, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக உரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான கைத்தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

அதற்கான பொருத்தமான காணிகள் மாகாண நிர்வாகத்தால் வழங்கப்படும் பட்சத்தில் அத்திட்டத்தை உறுதியாகச் செயற்படுத்த முடியும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் கடன் திட்டங்களை வன்னிப் பிரதேசத்திலுள்ள தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, காணி உரிமங்கள் இல்லாமையால் வங்கிக் கடன்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார்.

இது தொடர்பில் உரிய வங்கிகளுடன் கலந்துரையாடி, அதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்கிச் செயற்படுத்த உதவுவதாகப் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன், முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதிலான காலதாமதங்கள் குறித்தும் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான பிரச்சினைகளைத் தனித்தனியாக அணுகி, முதலீட்டாளர்களுக்கான தீர்வுகளை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஒழுங்கமைப்புகளைச் செய்து தருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.