;
Athirady Tamil News

தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்

0

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் கீழ், தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.