சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று…!

உண்மையை பேசும் உரிமைக்குரிய நாள்… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பெருமைகளை பறைசாற்றும் தினம்… அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயற்படும் ஊடகத்தின் தினம்… இப்படி இன்றைய நாளை பலவிதங்களிலும் தெளிவுபடுத்தலாம். ஆம்… சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (3).
உலகம் முழுவதும் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது ஊடகங்களின் சுதந்திரத்தை உறுதி செய்யவும், உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பை கோரவும் கடைபிடிக்கப்படும் முக்கியமான நாள் எனலாம்.
ஊடகம் என்பது ஒரு ஜனநாயக நாட்டில், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான பாலமாக உள்ளது. அந்த வகையில், உண்மை, நேர்மை, நடுநிலை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படும் ஊடகமே மக்கள் நலனுக்காகச் செயற்படும்.
இருப்பினும், இன்று உலகின் பல நாடுகளில் ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் சுதந்திரமாக எழுதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுவது, கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, ஏன் கொலை செய்யப்படுவது வரை இடம்பெறுகின்றமை மறுப்பதற்கில்லை.
எது எப்படியிருந்தபோதிலும், மக்களுக்கு உண்மையையும் தெளிவையும் கொடுப்பதில், ஊடகங்கள் எப்போதுமே பின்னிற்பதில்லை. சிலரைத் தவிர்த்து, மற்ற அனைத்து ஊடகவியலாளர்களுமே, மக்களுக்கான உண்மைத் தகவல்களை அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டபடிதான் உள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக, ஊடகத்துறையானது பல்வேறு நாடுகளிலும், பல வகையான அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகின்றன. இதை எதிர்க்கவும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் பொருட்டுமே, மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) கொண்டாடப்படுகிறது.
ஆரம்பம்
1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை அறிவித்தது. இது UNESCOவின் பரிந்துரையின் பேரிலேயே நடை பெற்றது. இந்த தினம், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் மட்டும் அல்லாமல், தொழில்முறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்வது போன்ற ஆபத்துகள், துன்புறுத்தல்கள், கொலைகள் போன்றவை குறித்தும் உலகின் கவனத்தை ஈர்க்கிறது.
இந்நாள் சொல்வது என்ன?
ஊடக சுதந்திரத்தை உரிமையாகவே பார்க்கும் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தொழில்முறை சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
மக்களும் ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
சுயாதீன ஊடகங்களுக்கான ஆதரவைக் கட்டமைக்க வேண்டும்.
உண்மையை கூறும் ஊடகவியலாளர்களை மக்கள் தம்மால் இயன்றளவுக்கு ஆதரிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பொய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உண்மையான தகவல்களை மக்களுக்கு அளிப்பது ஊடகத்தின் கடமை.
அரசியல் தூண்டுதல், வணிக அழுத்தம் அல்லது ஜனாதிபதிகள் கொண்ட கட்டுப்பாடுகளின்றி ஊடகம் இயங்க வேண்டும்.
ஊடக சுதந்திரம் இல்லையெனில் மக்கள் புலனாய்வில்லாமல் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும்.
ஊடகவியலாளர்கள் தங்கள் வேலையை பாதுகாப்புடன் செய்யும் உரிமை பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமாக, உண்மை பேசும் வாய்ப்பும், அதை பாதுகாக்கும் சமூகமும் அமையவேண்டிய மிக முக்கிய தேவையாகும். அந்த வகையில், உலக ஊடக சுதந்திர தினமானது, உண்மையை பேசும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதை நினைவூட்டும் நாளாகும்.
மொத்தத்தில், உண்மை பேசுவோருக்கு இடமளிக்கும் வகையில், சுதந்திரமாக இயங்கும் ஊடகமே, மக்களுக்கான உண்மையை வெளிக்கொணரும். உண்மை தேடும் ஒவ்வொரு காலத்திலும், ஊடக சுதந்திரம் ஒளி வீசும் தீபமாக இருக்க வேண்டும்.
“சுதந்திர ஊடகமே உண்மையின் குரல்!”