;
Athirady Tamil News

மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்

0

ஹரிகரன்

31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.

ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்.

1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் ஹபியாரிமானா, பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, டுட்சி சிறுபான்மையினர் மீது, ஹூட்டு பெரும்பான்மையினர் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டனர்.

தலைநகர் கிகாலியில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. சுட்டும் வெட்டியும், இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கடந்த நூற்றாண்டில் மிகக் கோரமாக அரங்கேறிய ஒரு இனப்படுகொலையாக இது அடையாளப்படுத்தப்படுகிறது.

சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் ருவாண்டாவில் சுமார் 8 இலட்சம் வரையிலான சிறுபான்மை டுட்சிக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன.

சுமார் 5 இலட்சம் வரையான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இதற்குப் பின்னர், அங்கு சர்வதேச தலையீட்டுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த- இனப்படுகொலை அரசாங்கம விரட்டியடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டன.

இப்போது ருவாண்டா ஆபிரிக்காவிலேயே மிகமிக அமைதியான ஒரு நாடாக விளங்குகிறது.

உலகளவில் கூட, அமைதியான நாடு என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது.

ருவாண்டா என்றால் எதிர்மறையான ஒரு எண்ணமே மனதில் தோன்றும்.

அந்தளவுக்கு அங்கு நிகழ்ந்த இனஅழிப்பின் அடையாளம் உலகம் முழுவதும் பதிவாகியிருக்கிறது.

ஆனால், இப்போது அந்த நாட்டின் நிலைமை அதற்கு மாறாக உள்ளது என்பதை, ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவர் கல்லி அலெசின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

பாதுகாப்பு மிக்க ஒரு நாடாக அது மாறியிருக்கிறது.

பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு 8.2 வீத பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த ருவாண்டா, 2024 ஆம் ஆண்டு 8.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

இது அந்த நாடு எந்தளவு வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அங்கு சேவைகள் துறையும், தொழிற்துறைகளும், விவசாயத் துறையும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக அது மாறியிருக்கிறது.

அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 63.75% வீதமானோர் பெண்களாக இருக்கின்றனர்.

பெண்கள் அங்கு மிகவும் பாதுகாப்பான நிலையை உணர்கிறார்கள்.

பெண் சுற்றுலா பயணிகள் தனித்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகஉகந்த இடமாக இருக்கிறது.

இப்படி ருவாண்டாவின் புகழை அடுக்கியிருக்கிறார், கல்லி அலெஸ்.

நீண்ட இனஅழிப்பு வரலாற்றை கொண்டிருக்கும் இலங்கைத்தீவு போரில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு, 16 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனாலும், இலங்கைத் தீவு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக உருவாகவில்லை- உருவாக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் இல்லை, அது மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வங்குரோத்து நிலையில் இருந்து மீளுவதாகச் சொல்லப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதார நிலையும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்று வருவதாக கூறப்படுகின்ற போதும், அதனை நிரூபிக்கக் கூடிய வகையில், மக்களால் உணரக் கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரம் செழிப்பை நோக்கி நகரவில்லை.

அனைத்து சமூகங்களுக்குமான பொருளாதாரப் பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்படாமல், கேள்விக்குறியான நிலையே நீடிக்கிறது.

அதேவேளை, அரசியல் ரீதியாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

போருக்கான அடிப்படைக் காரணிகளை தீர்ப்பதற்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இப்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கங்கள் செயற்படுத்திய விடயங்களை கூட, வலுவற்றதாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது

எந்த ஒரு போருக்கும் அரசியல் ரீதியான காரணிகள் இருக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கும் அரசியல் காரணிகள் இருந்தன.

தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளும் அட்டூழியங்களும் இனப்படுகொலைகளும் தான் பெரும் போருக்குள் நாடு தள்ளப்படுவதற்கு காரணம்.

அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படாமல், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் போனதன் விளைவு அது.

அதற்காக முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளும் சமாதான பேச்சுக்களும் எந்த பயனும் தராத நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் மிகப்பெரிய இனஅழிப்பை அரங்கேற்றினார்கள்.

அதன் பின்னரும், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரவோ உரிமைகளை உறுதிப்படுத்தவோ இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசியல் ரீதியாக அதனை உறுதிப்படுத்தாமல் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாது.

ஆனாலும் எந்த ஒரு சிங்கள ஆட்சியாளரும் அதற்குத் தயாராக இல்லை.

அதேபோல, போரின்போது இடம்பெற்ற இனஅழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவோ இல்லை.

பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் துணியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காமல் போராடுகின்ற நிலை இன்று வரை தொடர்கிறது.

பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது.

ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் – குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இது இலங்கையில் நல்லிணக்கம், நிலையான அமைதி ஏற்படுவதற்கு உள்ள மிகப்பெரிய தடையாக உள்ளது.

31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அவலத்த எதிர்கொண்ட ருவாண்டா இன்று , மீள் எழுச்சி பெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அங்கு இடம்பெற்ற இனஅழிப்புக்கு பொறுப்புக்கூறல் இடம் பெற்றதுதான்.

இனஅழிப்பை மேற்கொண்டவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருமளவானோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் ஊடாக, முற்று முழுதாக இல்லாவிட்டாலும், பொறுப்புக்கூறல் கடப்பாடு பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதற்கு சர்வதேச துணையும் இருந்தது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், அத்தகைய நிலை இல்லை.

சர்வதேசமும் தனது முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை, இலங்கை அரசும் பொறுப்புக்கூறலை ஒரு முக்கிய கடப்பாடாக கருதி, நிறைவேற்றவில்லை .

தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குவதாக கூறிய இப்போதைய அரசாங்கம், அதனை தொடங்கவே இல்லை.

இவ்வாறான நிலையில், இலங்கையின் நிலையான அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை.

போருக்குப் பிந்திய அமைதி என்பது, அரசியல், பொருளாதார, பொறுப்புக்கூறல், சமூக ரீதியாக மாற்றங்களின் ஊடாகத் தான், சாத்தியப்படும்.

அத்தகைய மாற்றங்களை இலங்கை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏதும், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படுவதாக இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.