;
Athirady Tamil News

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரானுவ வாகனம் பொது மக்களினால் முற்றுகை!! (படங்கள்)

0

இரானுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இரானுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது.

வவுனியா புகையிரத வீதியூடாக முச்சக்கரவண்டியில் குறித்த பொதுமகன் (முச்சக்கரவண்டியின் சாரதி) வருகை தந்த சமயத்தில் குறித்த முச்சக்கரவண்டி முன்பாக சென்ற இரானுவ வாகனத்தினை முச்சக்கரவண்டி சாரதி முந்தி சென்றுள்ளனர். இதன் போது இரானுவத்தினருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அச் சந்தர்ப்பத்தில் இரானுவத்தினர் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் இரானுவ வாகனத்தினை பின் தொடர்ந்து பண்டாரிக்குளம் பகுதியில் இரானுவ வாகனத்தினை வழிமறித்ததாகவும் பாதிக்கப்பட்ட பொதுமகன் (முச்சக்கரவண்டியின் சாரதி) தெரிவித்தார்.

இரானுவத்தினரின் இச் செயற்பாட்டினை கண்டித்து பண்டாரிக்குளம் பகுதியில் பொதுமக்கள் இரானுவ வாகனத்தினை முற்றுகையிட்டிருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் இரானுவ வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் இரானுவ வாகனத்தினை பொலிஸார் விடுவித்திருந்தனர்

மேலும் தாம் இரானுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.