;
Athirady Tamil News

பழிக்குப்பழியாக பெயிண்டர் குத்திக்கொலை – 11 பேர் கும்பல் ஆத்திரம்…!!

0

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (19), இவர்கள் 2 பேரும் நேற்றிரவு உறவினர் ஒருவரை சபரிமலைக்கு அனுப்பி வைக்க கெஜ்ஜல் நாயக்கன்பட்டிக்கு வந்தனர்.

அப்போது 11 பேர் கும்பல் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் திருநாவுக்கரசு, சரவணன் ஆகிய இருவரையும் அவர்கள் கத்தியால் குத்தியதுடன், கல்லாலும் தாக்கினர். இதில் நிலை குலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இதையடுத்து 2 பேரையும் மீட்டு உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மல்லூர் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு:-

நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திலிப்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருநாவுக்கரசுவும், சரவணனும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வந்த நிலையில் திலிப்குமாரின் ஆதரவாளர்களால் பழகிகுப்பழியாக இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் 2 பேரும் திலிப்குமார் கொலை செய்யப்பட்ட பிறகு வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் வசித்து வந்ததும், நேற்று சொந்த ஊர் அருகே வந்த போது திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசுக்கு ரம்யா (20) என்ற கர்ப்பிணி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.