அரசாங்கம் முன்மொழிந்த திட்டத்தை ஐ.எம்.எப் ஏற்றது – ஆளுநர் நந்தலால்!!
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையின் முன்மொழிந்த திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நிதி அமைச்சு நேற்றும் (நேற்று முன்தினம்) சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.
இப்போதும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் மட்டத்திற்கு வந்துள்ளது. விரைவில் இணக்கம் காணப்படும் . கொள்கை திட்டம் குறித்த பேச்சுக்கள் அடுத்ததாக ஆரம்பிக்கப்படும். அதேபோல் விரைவில் உடன்படிக்கைக்கு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் சுயாதீனம், சட்டம் ஒழுங்கு உறுதிப்பாடு மற்றும் ஊழல் செயற்பாடுகளை நிறுத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் கூறிய விடயங்களாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியம் இது குறித்து முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை. ஆகவே இதில் பிரச்சினைகள் ஏற்படப்போவதில்லை.
கடன் மீள் கட்டமைப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, ஆரம்பகட்ட பேச்சுகளாக இவை அமைந்துள்ளன. எனினும் பணியாளர் மட்ட பேச்சுவார்த்தைகள் முடுவுக்கு வந்த பின்னர் அடுத்தகட்டமாக இவற்றில் கவனம் செலுத்தப்படும். ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.