திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரோட்டம் நடந்தது..!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/10/1771178-tirupati-gold-thertoots-750x430.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக ‘ராமச்சந்திரமூர்த்தி’ அலங்காரத்தில் சுதர்சன சாளக்ராம ஹாரம் மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தமக்கு பிடித்தமான, விசுவாசமான அனுமந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனுமனை போல் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் பக்தர்களும், பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே மலையப்பசாமி அனு மந்த வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதாரெட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மேலும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.