;
Athirady Tamil News

தென்பெண்ணை நீர்பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும்- மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

0

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே “யர்கோல்” என்னுமிடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த 2019-ல் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மத்திய அரசை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும், உரிய தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கவும், நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.

அந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நடுவர் மன்றம் அமைப்பது குறித்து மத்திய நீர் ஆணைய குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக, சமரச குழு மூலம் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில், சமரச குழு மூலம் தீர்வு காண்பது என்பது முடிவுக்கு வரவில்லை. எனவே, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

மேலும் நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைத்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால் இதுவரை ஏன் நடுவர் மன்றம் அமைக்கவில்லை.? வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அதுகுறித்து சிந்திப்பீர்களா?” என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இந்த நதி நீர் பங்கீடு விவகாரத்தில் 2 முறை மட்டுமே சமரச குழு கூடியது. அதிலும் முடிவு எட்டப்படவில்லை.

எனவே நடுமன்றம்தான் தீர்வு. அதனை விரைந்து அமைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நான்கு வாரத்தில் நடுவர்மன்றம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்டு வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.