;
Athirady Tamil News

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, 24 காரட் துரோகி- காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்..!!

0

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது கட்சியை விட்டு வெளியேறிய பிறகு கண்ணியமான மௌனம் காத்த கபில் சிபல் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம், ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்பப் அழைக்கக் கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து அவர்கள் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர். சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும் மிக நல்ல நண்பருமான கபில் சிபலைப் பற்றி என்னால் நினைக்க முடிகிறது அவர், சிந்தியா மற்றும் சர்மாவைப் போல அல்லாமல் மிகவும் கண்ணியமான மௌனம் காத்துள்ளார். எனவே, கண்ணியத்தைக் காப்பாற்றிய அத்தகைய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான, 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜெயராம் ரமேஷின் கருத்துக்கு பதிலளித்த மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்தியா மற்றும் சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர், ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு இல்லாதது, முற்றிலும் ஜனநாயகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.