;
Athirady Tamil News

சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

76 வயதாகும் சோனியா காந்திக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக சோனியா காந்திக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, தனது தாயை உடன் இருந்து கவனித்து வருகிறார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை டெல்லியில் இருந்து நேற்று தொடங்கினார். அவரது யாத்திரை நேற்று மாலை உத்தரப் பிரதேசத்தை அடைந்தது. 7 கிலோ மீட்டர் தூரம் பயணித்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கிடைத்த தகவல் காரணமாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் உடனடியாக டெல்லி திரும்பினர்.

சோனியா காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமைய்யா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவர் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.